அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை காண அமெரிக்கா வர விரும்பும் ரசிகர்களுக்காக சிறப்பு விரைவு விசா வழங்கும் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா ஆகிய மூன்று நாடுகளிலும் அடுத்த ஆண்டு ஜூன் முதல் ஜூலை வரை உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஏற்கனவே இலட்சக்கணக்கானோரால் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகத்தின் விசா கட்டுப்பாடுகள் ரசிகர்களை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்த சூழ்நிலையில், வெள்ளை மாளிகையில் சர்வதேச கால்பந்து சங்கமான ‘ஃபிஃபா’வின் தலைவர் ஜியான்னி இன்பான்டினோவுடன் (Gianni Infantino) இணைந்து செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ‘ஃபிஃபா பாஸ்’ (FIFA Pass) எனப்படும் புதிய விரைவு விசா திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தின் கீழ்:
FIFA Pass மூலம் நேரடியாக நுழைவுச்சீட்டுகளை வாங்கிய ரசிகர்களுக்கு
விசா நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்படும்.
அவர்கள் 6 முதல் 8 வாரங்களுக்குள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.








