அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று (22) நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் தலைமையிலான நீதியரசர்கள் மூவரடங்கிய உயர் நீதிமன்ற குழாமின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்யும் நோக்கத்துடன் அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்ட மூலத்திலுள்ள சில ஏற்பாடுகள் மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்றும் மேலும் சில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்திலுள்ள கேள்விக்குரிய ஏற்பாடுகளை நிறைவேற்றப்பட வேண்டுமானால், அவற்றை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here