பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம்பெண் ஒருவர் உட்பட 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒகஸ்ட் 10 அன்று கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய ஐவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வடக்கு பிரிவின் குற்ற விசாரணை பிரிவு கடந்த 17 ஆம் திகதி கொழும்பு – 15 பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மற்றும் 23 வயது பெண் ஆகியோரை குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்தது.
அவர்களிடம் இருந்து 25 கிராம் 840 மில்லிகிராம் “ஐஸ்” என அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 19, 25 மற்றும் 28 வயதுடைய 3 சந்தேக நபர்களை மட்டக்குளிய, தொம்பே மற்றும் முல்லேரியா பகுதிகளில் வைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 12 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.








