ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட காலமாக காட்சிகளைப் பதிவு செய்யவில்லை என குற்றப்புலானய்வு பிரிவு, நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அவர் உயிரிழந்த இல்லத்தில் இருந்து காணொளி எதுவும் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் அப்பகுதிக்குள் மக்கள் நுழையும் மற்றும் வெளியேறுவதை காட்டும் சிசிடிவி காட்சிகளை அருகிலுள்ள வீடுகளில் இருந்து பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அத்துடன் மே 12 அன்று, சந்திரசேனவுக்குச் சொந்தமான மற்றொரு வீட்டில் பொலிசார் சோதனை நடத்தியதோடு அங்கிருந்த ஒரு மடிக்கணினி மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் சான்றாக அளித்துள்ளனர்.
இதேநேரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற சாட்சி விசாரணையில் மேலும் 6 சாட்சிகளும் இன்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மறைந்த, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி, கபில சந்திரசேன அவரது உறவினரான அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் அண்மையில் உயிரிழந்த நிலையில் மீட்க்கப்பட்டார். தூக்கிலிடப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதோடு அது குறித்து ஆராயப்படுகின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட ஏர்பஸ் கொள்முதல் தொடர்பில் கபில சந்திரசேன மீது நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவரது உயிரிழப்பு பதிவாகி இருந்தது.
இந்நிலையில் அவரது உயிரிழப்பு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







