வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா இன்று(10.10)  வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை திறந்த வெளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில், கிளி.இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் திறந்த வெளி அரங்கில் காலை 9.00மணிக்கு தமிழ் இன்னிய இசையுடன் விருந்தினர்கள் அழைத்து வருதலைத்தொடர்ந்து ஆரம்பமானது .

இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஷ் மற்றும் கிளி.இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை அதிபர் சு.சுதாஸ்கரன், கிளி.திருவையாறு கலைக்குரிசில் நா.யோகேந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் கெளரவ விருந்தினர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

கலைஞராகவும் பல கலைப்படைப்புக்களை ஆற்றி மறைந்த பூநகரி இரணைமாதாநகர் பகுதியை சேர்ந்த அமரர் கலைநகரி சந்தியா புவனேந்திரனை நினைவுறுத்தும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வின் போது கலாசார பேரவையினர் மற்றும் பாடசாலை மாணவர்களின்  கலைநிகழ்வுகள், சான்றிதழ் வழங்கல், கலைஞர் கெளரவிப்பு என்பன இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.கலைக்கிளி விருது மற்றும் இளங்கலைஞர் விருது என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், பாடசாலைகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here