கிளிநொச்சி பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி விவகாரம், கரைச்சி பிரதேச சபைக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அதிகாரத்தில் இல்லாததின் விளைவை கிளிநொச்சி வர்த்தகர்கள் உணர்ந்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று (12.03.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், “கிளிநொச்சி பொதுச் சந்தை வர்த்தகர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொதுச் சந்தை வளாகத்தில் உலக வங்கியின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை, சுற்று நிரூபங்களுக்கு அமைவாக கோரல் அடிப்படையில் குத்தகைக்கு வழங்குவதற்கு கரைச்சி பிரதேச சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கிளிநொச்சி  பொதுச் சந்தை என்பது யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியமர்ந்த காலப் பகுதியில் சந்தை அமைக்கப்பட்டுள்ள  பிரதேசம் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், அதனை விடுவித்த எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இடம்பெயர்விற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு வர்த்தக நிலையங்களை பகிர்ந்தளிப்பதற்கு  நடவடிக்கை முன்னெடுத்திருந்தார்.

அப்போதும் அரச அதிகாரிகளினால், அரச சுற்று நிரூபங்களுக்கு அமையவே கடைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத எமது செயலாளர் நாயகம், அரச சுற்றிக்கைகள் ஒழுங்கு விதிகள் போன்றவை மக்களின் நலன்களை முன்னிறுத்தியே உருவாக்கப்படுகின்றன.  அனைத்தையும் இழந்த நிலையில் மீள்குடியேறிய மக்களை சுற்றறிக்கைகளின் பெயரால் மேலும் துன்பப்படுத்த முடியாது என்ற கருத்தை முன்வைத்துடன் அப்போதைய ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியுடன் கலந்துரையாடி எந்தவிதமான முற்பணங்களும் இன்றி குறித்த கடைகள மக்களுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே,  தற்போது குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற மக்கள் நிச்சயமாக எங்களுடைய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா ஆட்சி அதிகாரத்தில் இல்லாததன் விளைவை தற்போது உணர்ந்திருப்பார்கள்.

எது எப்படியோ, தற்போது இந்த விவகாரம் நியாயமான முறையில்  தீர்க்கப்பட வேண்டும். சுற்று நிரூபங்களையும் சந்தை வர்த்தகர்களின்  எதிர்பார்ப்புக்களையும் சமரசம் செய்து இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு பிரதேச சபை அதிகாரிகளுக்கு சங்கடங்கள் இருக்குமாயின், இன்னும் இரண்டு மாதங்களில் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வரையில் குறித்த விவாகரம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறத்துகின்றது” என்று தெரிவித்தார்.

[யாழ் நிருபர் – இரட்னசிங்கம் முரளிதரன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here