தமிழ்க்கடவுள் முருகனின் வரலாறையும் தற்கால நிகழ்வுகளையும் இணைந்தவாறு குமரி கண்ட குமரன் எனும் பாடல் ஈழத்து இளைஞர்களால் வெளியீடு செய்யப்பட்டு அனைவரது கவனத்தையும் இணையத்தில் ஈர்த்துள்ளது. புத்தி கெட்ட மனிதரெல்லாம் மற்றும் டக் டிக் டோஸ் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த குழுவிடம் இந்த படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்க்கான நிதியினை மக்களிடமிருந்தே சேகரித்துள்ளனர்.

“குமரி கண்ட குமரன்” என்ற பாடல், தமிழரின் தொன்மையான நிலமையான குமரி கண்டம் நிலவிய காலத்திற்குத் திரும்பி, அவ்வழியிலே பயணிக்கச் செய்கிறது. சமுத்திரத்தில் மறைந்ததாகக் கூறப்படும் குமரி கண்டத்தின் கதை, மற்றும் அதில் வாழ்ந்த தமிழர்களின் போராட்டம், தைரியம் மற்றும் முருகன் எனும் தெய்வத்தின் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை ஆகியவை பாடலில் புலப்படுகின்றன . இந்த பாடலின் வரிகள், குமரனின் கதையை, தமிழர் மக்களின் போராட்டம், தைரியம், மற்றும் அவர்களின் புனித ஆற்றலின் அடையாளமாக விளங்கும் முருகனைச் சித்தரிக்கின்றன. அவற்றை கமல் அபரன் மற்றும் சாந்தகுமார் எழுதியுள்ளனர்.

பூவன் மதீசனின் கருவில் அவரே இசையமைத்துள்ள இந்த பாடல், கோகுலன், சாந்தன், சத்தியன் உள்ளிட்ட பல்வேறு குரல் கலைஞர்கள் இணைந்து பாடியதன் மூலம், ஈழத்தின் இசை வடிவத்தை பிரதிபலிக்கின்றது. இசையின் மேலதிக நுட்பங்களையும் ஒளிச்சமபடுத்தல்களையும் இசை மேம்படுத்தல்களையும் சாயீதர்ஷன் மேற்கொண்டுள்ளார். ராஜ் சிவராஜ் இயக்கிய இந்த வீடியோ ,  தமிழர் கலாச்சாரத்தின் அழகும் ஆழமும் கொண்ட காட்சிப் பொழிவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஏ கே கமல் அவர்களின் ஒளிப்பதிவு, அருணின் படத்தொகுப்பு மற்றும் குணரத்தினம் வாசிகரன், தாரு மற்றும் சத்யஜித் ஆகியோரின் ஒத்துழைப்புடன், குமரனின் கதையை உயிரோட்டமாக்குகின்றது. வி.எஸ். சிந்துவின் கலை இயக்கமும், முகமது நவீத் ஒழுங்கமைத்த நடனமும், தமிழர் மரபுகளையும், நம் மண்ணுக்கான காலமற்ற இணைப்பையும் பிரமிக்க வைக்கின்றன. முருகனாக வரும் தர்மலிங்கமும் தனது பங்கை செவ்வனே செய்திருக்கின்றார்.

“குமரி கண்ட குமரன்” தமிழர் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்ட அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய வீடியோ ஆகும். இது நம் எதிர்காலத்தையும் புத்துணர்வுடன் நினைவூட்டுகிறது, நம் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், கொண்டாடவும், நம்பிக்கையையும், சமூக ஒற்றுமையையும், கலைகளையும் கொண்டாடும் பேராண்மையை மெய்ப்பிக்கிறது. மக்களுக்காக போராடிய தலைவர்கள் தெய்வமாக்கப்பட வேண்டியவர்கள் எனும் தொனிப்பொருளை இது விட்டுச்செல்வதாகவும் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here