அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் உள்ள வீடு ஒன்றில் சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் என்பவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (16.09) இரவு 10.45 மணியளவில்  குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே  குறித்த படுகொலைக்கு  பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பி மீது  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான அண்ணனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகம் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன்  விரோதம் காரணமாக  மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here