45வது செஸ் ஒலிம்பியாட் தொடர் ஹங்கேரியில் உள்ள புத்தாபெஸ்ட் நகரில் நடைபெற்றது.

இதில் இந்தியா தரப்பில் ஆண்கள் அணி ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவில் ஒரு அணியும் பங்கேற்றது. இந்திய ஆடவர் அணியில் குகேஷ், அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா மற்றும் ஸ்ரீநாத் நாராயணன் கலந்து கொண்டனர்.

11வது சுற்றில் இந்திய அணி டிரா செய்தாலே தங்கம் கிடைக்கும் என்ற நிலையில், ஸ்லொவேனியா அணியை எதிர்கொண்டது.

இதில் குகேஷ், அர்ஜூன் மற்றும் பிரக்ஞானந்தா மூவரும் வெற்றியை பெற்றதன் மூலம் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இறுதியாக 3.5-0.5 என்ற கணக்கில் ஸ்லோவேனியா அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியை பெற்றது.

மொத்தமாக 11 போட்டிகளில் 22 புள்ளிகளுக்கு ஒரு புள்ளிகள் மட்டுமே குறைவாக எடுத்து இந்திய அணி 21 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

அதேபோல் மகளிர் பிரிவில் இந்திய அணி கடைசி சுற்றில் அசர்பைஜான் அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய அணியின் ஹரிகா, திவ்யா தேஷ்முக் மற்றும் வன்திகா அகர்வால் மூவரும் வெற்றியை பெற, தமிழ்நாட்டின் வைஷாலி மட்டும் டிராவில் முடித்தார்.

இதன் மூலமாக அசர்பைஜான் அணியை 3.5 – 0.5 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

அதுமட்டுமல்லாமல் இந்திய ஆடவர் அணியின் பி ஹரிகிருஷ்ணா ரிசர்வ் போர்டு வீரராக பங்கேற்று 17 புள்ளிகள் வென்று அசத்தினார்.

இன்னொரு பக்கம் சீனியர் வீராங்கனையான டானியா சச்தேவ் ரிசர்வ் போர்டு வீராங்கனையாக விளையாடி 19 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

மேலும் கடந்த ஆண்டு சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய அணியால் வெண்கலப் பதக்கத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

அப்போது இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் பலரும் கண்ணீருடன் வெளியேறி இருந்தனர். ஆனால் அடுத்த ஆண்டிலேயே மீண்டெழுந்த இந்திய அணி வீரர்களும், வீராங்கனைகளும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவின் இரு அணிகளும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றுவது இதுவே முதல்முறையாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here