நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 லட்சம் ரூபாய், ஆரம்ப கட்ட இழப்பீட்டு தொகை மாத்திரமே என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த இழப்பீடு தொடர்பில் பலரும் விமர்சனம் செய்துள்ள நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடக பேச்சாளருமான ஏ.சி. கஜநாயக்க இதனை கூறினார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை வழங்குவது தொடர்பில் திணைக்களம் கவனம் செலுத்தி வருவதாக ஊடகம் ஒன்றிடம் அவர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து உயிரிழந்த அதிகாரிகளினதும் இறுதிக் கிரியைகளும் சிறைச்சாலைகள் திணைக்கள செலவிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் இந்த மோதலில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் குறிப்பிட்ட தொகை இழப்பீடு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த மோதலில் காயமடைந்த 07 சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
அவர்களில் 03 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.








