மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன.

எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மன்னார் பஜார் பகுதியில் இன்று வியாழக்கிழமை (4/17/2025) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் (NPP) உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

சுமார் 5 – 6 வருடங்களுக்கு பின்னர், எம்மிடம் மிகப் பாரிய அளவிலான டாலர் கையிருப்பில் உள்ளது.

கடந்த 6 மாதங்களாக ரூபாவின் மதிப்பு சரியவில்லை. நாம் எரிபொருள் விலையை குறைத்தோம். மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பாடுபடுகிறோம். அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்ந்துள்ளது.

அஸ்வெசும உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல், அடுத்த ஜூன் மாதம் முதல் 400,000 புதிய குடும்பங்களுக்கு அஸ்வெசும வழங்கப்படும்.இது மக்களை கவனித்துக் கொள்ளும் அரசாங்கமாகும்.

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கப்படுகின்றன. 300இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு காலணிகள் வாங்க பணம் வழங்கப்படுகிறது.1.6 மில்லியன் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்ய தலா ரூ. 6,000 வழங்கினோம்.

அது மாத்திரமல்லாமல், 5-6 வருடங்களுக்கு பின்னர் தற்போது 30ஆயிரம், பேரை அரச சேவையில் சேர்க்க உள்ளோம்.இதற்காக எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பின்னால் செல்ல வேண்டிய அவசியமில்லை. பத்திரிகைகளில் விளம்பரப் படுத்துவோம், அதன்படி பரீட்சைக்கு தோற்றி அதிக புள்ளிகளைப் பெற்று வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.

அரச சேவையில் தமிழ் பேசுபவர்களின் பற்றாக்குறை உள்ளது. பொலிஸ் நிலையங்களிலும் இது காணப்படுகின்றது.

எனவே, 2,000 புதிய பொலிஸார் பணியமர்த்தப்படுவார்கள், தமிழ் தெரிந்த உங்கள் பிள்ளைகளை பொலிஸ் பணியில் இணைய செய்யுங்கள். இது ஒரு மரியாதைக்குரிய வேலையாகும். நம் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வேலை. மேலும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ் பேசத் தெரிந்தவர்கள் அரச பணியில் சேர வேண்டும். இதன் மூலம் ஒன்றாக இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்.

அத்துடன் வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது. சில வீதிகள் மூடப்பட வேண்டியிருந்தது. தேசிய மக்கள் சக்தி இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து அவற்றை விடுவித்துள்ளது.

மக்கள் தங்கள் பணிகளை சுதந்திரமாகச் செய்யக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவோம். என அவர் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை  , மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

[மன்னார் நிருபர் – எஸ்.ஆர்.லெம்பேட்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here