மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் தீர்மானத்தை மேற்கொள்ள ஜனாதிபதிக்கு தைரியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதற்கான காரணம் என்ன எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரை நேற்றைய தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மூலம் முன்மொழியப்பட்ட நிலையில் அதற்கான விவாதம் இன்றைய தினம் ஆரம்பித்திருந்தது.
குறித்த விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“போர் நிறைவடைந்த ஒரு நாட்டில் பாதுகாப்புக்காக எதற்காக அதிகளவு தொகை ஒதுக்கப்பட வேண்டும்?
அது ஒரு வீண் செலவு.
13 ஆவது திருத்த சட்டத்தினூடாக கொண்டு வரப்பட்ட மகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது.
இது ஒரு இனத்திற்கு செய்யக்கூடிய மிகப் பெரிய பின்னடைவு. எப்போதும் போல வழமையான ஒரு வரவு செலவு திட்டத்தையே ஜனாதிபதி இம்முறையும் முன்வைத்திருந்தார்.
தமிழ் மக்களுக்கான தீர்வுகள் ஒரு போதும் வழங்கப்படவில்லை. அவற்றை செயல்படுத்த அரசாங்கம் ஆர்வம் காட்டடுவதும் இல்லை. அரசியல் தீர்வுக்கும் தயாரில்லை.
சிங்கள தலைவர்கள் ஒரு போதும் தமிழர்களுக்கான தீர்வை வழங்க மாட்டார்கள். ஆகவே, சர்வதேச சமூகம் தமிழர்களுக்கான தீர்வை வழங்க முன்வர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.






