தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரிய முதியவர் கைதடி அரச முதியோர் இல்லத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு காலை இழந்த முதியவர் ஒருவர் கடந்த சில வாரங்களாக நோய் வாய்ப்பட்ட நிலையில், அவரை பராமரிக்க ஆட்களின்றி மானிப்பாய் பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் தஞ்சமடைந்திருந்தார்.
அவரை ஊரவர்கள் முதியோர் இல்லத்தில் இணைத்து விட முயற்சிகளை முன்னெடுத்தவேளை , அவரை பராமரிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் உள்ளிட்ட சில காரணங்களால் இல்லங்கள் பொறுப்பேற்க மறுத்துள்ளன.
இதனால் விரக்தி அடைந்த முதியவர் தன்னை கருணை கொலை செய்யுமாறு , வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து , கைதடியில் உள்ள அரச முதியோர் இல்லத்தில் தற்போது குறித்த முதியவரை இணைத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








