நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது கைதிகள் வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரிக்கு, கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“நீ எம்மிடம் சிக்கினால் கொன்று விடுவோம்” என அவர்களால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் அவர் கடமைக்கு சமூகமளித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே அவரது பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் கலவரத்தை தூண்டியதாக கூறப்படும் சுரேஷ் தாக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
சிறைச்சாலை கலவரத்தை வழிநடத்தியதாக கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரை, தற்போது அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் உள்ள கைதிகள் குழு ஒன்று மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் காரணமாக அவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிப்பதாக பிரபல சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.








