கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணைக்குழுவால் தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தேர்தல் ஒளிபரப்பு கட்டணம், இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 1300 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், பல தொலைக்காட்சிகள் தேர்தல் முடிவுகளை ஒளிபரப்புவதில் இருந்து விலகக்கூடும் என இலங்கை இலத்திரனியல் ஒளிபரப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

தேர்தல் முடிவுகளை நேரடியாக ஒளிபரப்புவது மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். எனவே, அதிக கட்டணம் விதிப்பது காரணமாக தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிலிருந்து விலகினால், மக்களின் தகவல் அறியும் உரிமை மீறப்படும் என அந்தக் கடிதத்தின் மூலம் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை இலத்திரனியல் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ஜயசூரிய மற்றும் செயலாளர் லக்ஸிரி விக்கிரமகே ஆகியோர் கையொப்பமிட்டுள்ள இந்தக் கடிதத்தில், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையையும், தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கும் விளம்பர வருமான அளவையும் கருத்தில் கொண்டால், ரூபாய் 8 மில்லியன் (80 இலட்சம்) போன்ற அதிக கட்டணத்தை எந்த ஒரு தொலைக்காட்சியும் செலுத்த முடியாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் நாளின் காலை முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நேரடி ஒளிபரப்பை மேற்கொள்வதற்கு தொலைக்காட்சிகள் அதிக செலவினங்களை மேற்கொள்ள நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தகவல்களை மக்களுக்கு வழங்குவதே தொலைக்காட்சிகளின் நோக்கமாக இருக்கின்றது. அதன் மூலம் இலாபம் ஈட்டும் நோக்கம் இல்லை.

எனவே, கடந்த தேர்தல்களில் வசூலிக்கப்பட்ட கட்டண அளவையே இந்த முறையும் பின்பற்றுமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் இலத்திரனியல் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here