நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இன்று (7) பிற்பகல் 4:00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
இந்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் வட மத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் சேதங்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.








