பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
தமது நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆசிரியர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் விளைவாக, பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள், ஆய்வுப் பணிகள் மற்றும் மற்ற கல்விச் செயற்பாடுகள் முழுமையாகத் தடைப்பட்டுள்ளன.
பேராசிரியர்கள் நாட்டைவிட்டு வௌியேறுவதால் பல்கலைக்கழகங்களில் உருவாகியுள்ள வெற்றிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்காததுடன், சம்பள மாற்றங்கள், ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறை, மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த தேவையான ஆதரவு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ச்சியாக உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, பேராதனை, யாழ்ப்பாணம், ருஹுணு, ரஜரட்ட உள்ளிட்ட முக்கிய அரச பல்கலைக்கழகங்களில் இது காரணமாக விரிவுரைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்விப் பயணத்தில் பெரும் தடையை ஏற்படுத்தும் வகையில், இந்த பணிப்புறக்கணிப்பு விரிவாகும் சாத்தியம் உள்ளதாகவும், உரிய தீர்வு வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.








