பிள்ளைகளைப் பராமரிப்பது மாத்திரமல்ல அவர்களுக்கான தொழிற்பயிற்சிகளையும் வழங்குவது சிறப்பானது. அதுவும் என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கி பிள்ளைகளின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றமை உண்மையில் பாராட்டப்படவேண்டியதே இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

அரியாலையில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20.05.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் கௌரவ விருந்தினராகவும், எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராம தேசிய இயக்குநர் திவாகர் ரட்ணதுரை சிறப்பு விருந்தினராகவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். விருந்தினர்கள் மாணவர்களால் வரவேற்கப்பட்டனர். தேசியக்கொடி, மாகாணக்கொடி, நிறுவனக் கொடி என்பன ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.

மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்த பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர்,

சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். காலத்தின் சூழலாக அது மாறியிருக்கின்றது. அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது.

எஸ்.ஓ.எஸ். தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிபெற்று வெளியேறும் மாணவர்கள் தங்கள் தொழில்துறையை எப்படி அமைத்துக்கொள்கின்றார்கள் என்பதில்தான் இந்தப் பயிற்சியின் வெற்றி தங்கியிருக்கின்றது. என்.வி.க்யூ. தரச் சான்றிதழைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியும். மேலும் கற்கைகளையும் தொடரமுடியும். இந்தச் சான்றிதழைப்பெற்று தொழில் தகைமையுள்ளவர்களாக மாறியுள்ள நீங்கள், நாளை பலருக்கு தொழில்வாய்பை வழங்கக் கூடிய தொழில்முனைவோராகவும் மாறவேண்டும். அதேபோல இந்த நிறுவனம் தொழிற்பயிற்சி பெற்றுக்கொள்ள வருகின்ற தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு விடுதி அமைத்துக்கொடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளமையை வரவேற்கின்றேன், என்றார் ஆளுநர்.

எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராம தேசிய இயக்குநர் திவாகர் ரட்ணதுரை தனதுரையில், இலங்கையின் ஏனைய மாகாணங்களிலுள்ள தமது சிறுவர் இல்லத்துக்கு நிரந்தர பதிவுச் சான்றிதழ் மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தால் வழங்கப்பட்டாலும் வடக்கில் மாத்திரம் தற்காலிக பதிவுச் சான்றிதழ் வழங்கப்படுகின்றது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த மாகாண ஆணையாளர் திருமதி சுஜீவா சிவதாஸ், மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட நியதிச்சட்டத்திலுள்ள குறைபாடு காரணமாகவே நிரந்தர பதிவுச் சான்றிதழ் வழங்க முடியாத சூழல் இருக்கின்றது என்றும் மாகாணசபை அமைக்கப்பட்ட பின்னர் அந்தக் குறைப்பாட்டை நிவர்த்திக்கக் கூடிய திருத்தங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here