புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சி செய்வதோடு மன்னாரை மேம்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும், இவையெல்லாம் செயற்படுத்த  21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர்ப் பகுதியில் நேற்றைய தினம் (17.09.2024) செவ்வாய்க்கிழமை மதியம் நடைபெற்ற  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே இங்கு வருகை தந்திருக்கிறேன். மன்னாரில் பாரிய வளமுள்ளது. அதில் ஒன்று சூரிய சக்தி. அதை நாம் முழுமையாக பயன்படுத்துவோம். மன்னாரை சூரிய சக்தியின் மத்திய நிலையமாக மாற்றுவோம்.

மன்னாரில் சிங்கள கிராமங்களில் வாழும் மக்கள் எதுவித அச்சமுமின்றி வாழ முடியும் .சிங்கள கிராமங்களில் 5 பன்சலைகள் உள்ளன. அவற்றையும் நாம் பொறுப்பேற்போம்.

புலிகளுடன் தொடர்புபட்டுக் கைதாகி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய முயற்சிப்போம்.

மன்னாரை மேம்படுத்தி மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு புதிய பாதை ஒன்றை அமைப்போம்.  கமத் தொழிலை ஊக்குவிப்போம். இவையெல்லாம் செயற்படுத்த எம்மால் முடியும். 21 ம் திகதி நீங்கள் சிலிண்டருக்கு வாக்களியுங்கள் நாம் வெல்வோம் என்றார்.

குறித்த பிரச்சாரக் கூட்டத்தில் ராஜாங்க அமைச்சர்களான காதர் மஸ்தான், சுரேன் ராகவன்,பாராளுமன்ற உறுப்பினர்களான  கே.திலீபன், முஷராப், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டதோடு சுமார் 10 ஆயிரம் வரையிலான ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here