அநுராதபுரம், பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பதவிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (05.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பாலயாவெவ, போகஹவெவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
பதவிய,போகஹவெவ பிரதேசத்தி ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தி அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண், பதவிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக ரி – 56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் , துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








