மட்டக்களப்பு பாசிக்குடாவில் விபச்சார விடுதி ஒன்றை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் முற்றுகையிட்டு பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை நேற்று வெள்ளிக்கிழமை (07/03/2025) மாலை கைது செய்து ஒப்படைத்துள்ளதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் நீண்டகாலமாக ஹோட்டல் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வருவது தொடர்பாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரி.மேனன் தலைமையிலான பொலிஸார் குறித்த விபச்சார விடுதி தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்பித்து அனுமதியை பெற்ற பின்னர் குறித்த விடுதியை சம்பவதினமான நேற்று முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த இரண்டு பெண்கள் மற்றும் விடுதியின் பெண் முகாமையாளர் உட்பட 3 பெண்களை கைது செய்து ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








