புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிய ரக லொறியில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற நபர் நேற்றைய தினம் (27) கைது செய்யப்பட்டார்.
புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து ஏ-35 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படவிருப்பதாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், தருமபுரம் பொலிஸார் நேற்றைய தினம் அவ்வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பெறுமதிமிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.








