மெகசின் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க சென்ற 2 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (08) பகல் பேஸ்லைன் வீதி மெகசின் சிறைச்சாலையின் பக்க சுவர் அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 2 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் குறித்த இடத்தில் இருந்து சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீச முயன்ற போது, இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடம் இருந்த 02 பொதிகளை சோதனை செய்தபோது, 22 கிராம் 250 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 02 மில்லிகிராம் ஹஷ் போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 10 லைட்டர்கள், 02 சிறிய கையடக்க தொலைபேசிகள் ஆகியவையும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களும் 29 வயதுடைய கொழும்பு -14 பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








