யாழ், சுன்னாகம் – சூளானை பகுதியில் உள்ள ஆலயமொன்றில் பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட நபர், வீடொன்றில் மின் மோட்டார் திருத்தச் சென்றபோது மர்மமான முறையில் உயரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் இன்று சனிக்கிழமை (24.08) உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் – சூளானை பகுதியைச் சேர்ந்த 53 வயது நபரே உயிரிழந்தவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

திருவிழா நடைபெற்று வரும் இந்த ஆலயத்தின் அருகில் உள்ள வீடொன்றில் மின் மோட்டார் இயங்காத காரணத்தால் ஆலயத்தில் பிரசாதம் தயாரித்துக்கொண்டிருந்த நபரை வீட்டின் உரிமையாளர் அழைத்து, மின் மோட்டார் திருத்துமாறு கேட்டுள்ளார்.

அவ்வேளை, அந்த நபர் மின் திருத்த வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட்டரை எடுத்துக்கொண்டு வருமாறு வீட்டு உரிமையாளரிடம் கூறியுள்ளார்.

அவர் வீட்டினுள் சென்று டெஸ்ட்டர் எடுத்துக்கொண்டு சென்று பார்த்தபோது, மின் மோட்டார் திருத்துவதற்காக வந்த நபர் தரையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கும், பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here