காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை சிறியரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே அம்பாறையிலிருந்து மட்டக்களப்பிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றுக்கு தையல் இயந்திரங்களை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு இன்று அதிகாலை வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி பின் உயர் அழுத்த மின் இணைப்பிற்கான தூணையும் உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிற அதே வேளை லொறியின் முன் பகுதியும் மின்சார தூணும் மதிலும் பலத்த சேதமடைந்துள்ளது.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

மட்டக்களப்பு கல்முனை சாலையில் பயணிக்கும் வாகனங்கள் இப் பகுதியில் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது நேற்றைய தினமும் இன்று விபத்து ஏற்பட்ட கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதியில் பதிவான இரண்டு விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
[மட்டக்களப்பு நிருபர் – சதானந்தம் ஸோபிதன்]








