வைத்தியர் அர்ச்சுனா தற்காலிகமாக மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு வைத்தியர் ராஜீவை நியமித்துள்ளோம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு சென்ற பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ள நான் அங்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளேன். அங்குள்ள வைத்தியர்கள் தாதியர்கள் நன்றாக வேலை செய்கின்றனர்.
வைத்தியர் அர்ச்சுனா புதிதாக அத்தியட்சகர் கடமைக்கு சென்ற பின்னர் அங்கு பணிபுரிபவர்களால் எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அது தொடர்பில் அனைத்து உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளேன்.
குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் தற்காலிகமாக மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அவரின் பதவிக்கு வைத்தியர் ராஜீவை நியமித்துள்ளோம்.
இருப்பினும் குறித்த நியமனத்தை ஏற்காது வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ந்தும் தான் பதவியில் இருக்க வேண்டும் என இருந்து வருகிறார்.
வைத்தியசாலையில் தற்போது சில அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இருப்பினும் இவற்றை செய்ய விடாது குறித்த அத்தியட்சகர் முட்டுக்கட்டையாக இருந்து வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.








