ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்களை வழங்குவதற்கான இணைய முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தற்போது அச்சிடப்பட்ட மருத்துவச் சான்றிதழ்களை வழங்கி வரும் நிலையில், அங்கு ஏராளமான முறைகேடுகள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த வெளிப்படைத்தன்மையற்ற செயல்முறையைத் தவிர்க்கவே இணைய முறை அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் போதும், அதை புதுப்பிக்க பொதுமக்கள் வேரஹெரவிற்கு செல்வது அவசியமாக இருந்து வருகிறது. கைரேகைகளை வழங்குவதற்காகவே அவர்கள் நேரில் வர வேண்டியிருப்பது மக்கள் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இச்செயல்முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டு, வேரஹெரவிற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் ஜனித ருவான் கொடித்துவக்கு மேலும் தெரிவித்தார்.







