புதிய வாகன இலக்கத்தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (08) பாராளுமன்றத்தில் விளக்கம் வழங்கினார்.

வாய்வழிக் கேள்விக்கு பதிலளித்த அவர், 2025 செப்டம்பர் 30ஆம் திகதி வரையில் மொத்தம் 165,512 வாகன இலக்கத்தகடுகள் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

“வாகன இலக்கத்தகடுகளை வழங்குவதில் நாங்கள் திட்டமிட்டதை விட நீண்ட தாமதம் ஏற்பட்டுள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

புதிய இலக்கத்தகடுகளில் ஏழு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாகவும், அவற்றை சோதனை செய்வதற்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்ததாகவும் அவர் விளக்கினார்.

“அந்தப் பல்கலைக்கழகம் மூன்று மாதங்கள் எடுத்தது; அதில் ஆறு அம்சங்களையே சோதனை செய்ய முடிந்தது. ஏழாவது அம்சத்தை சர்வதேச அளவில் சோதனை செய்ய வேண்டியிருந்தது. அதனால் தான் தாமதம் ஏற்பட்டது,” என அமைச்சர் கூறினார்.

அவர் மேலும், இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் வாகனப் பதிவு செயல்முறையின் பாதுகாப்பு நிலையை உயர்த்தும் முயற்சியாக செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here