வவுனியா மாநகரசபையின் அனுமதியின்றி அரச நிலத்தில் வர்த்தக நிலையம் கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், இதுகுறித்து மாநகரசபை நிர்வாகம் அசமந்தமாக நடந்து கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வவுனியா நகரில் அரச காணியில் சிறிய அளவில் இருந்த வர்த்தக நிலையம் கடந்த சில தினங்களாக பெரிதாக்கி கட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக பலர் மாநகரசபை செயலாளரிடம் முறைப்பாடு செய்தும், அவர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், வவுனியா மாநகரசபையின் மேயர், பிரதி மேயர் மற்றும் சபை நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில் கூட, இச்செயற்பாடு தொடர்ந்ததாக எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை (09) சம்பவ இடத்துக்குச் சென்று கட்டுமானத்தை தடுத்து நிறுத்தினர். ஆனால் திங்கட்கிழமை (10) மீண்டும் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் அழுத்தத்தால் மீண்டும் நிறுத்தப்பட்டது.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வவுனியா மாவட்ட உதவித் உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தியிருந்தும், மாநகரசபை நிர்வாகம் அதனை அமுல்படுத்தவில்லை என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
இதன்போது, மாநகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றும், உயர் அதிகாரிகளின் தாமதமான முடிவினால் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்படாமல் திரும்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








