டுபாயிலிருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியொருவர், விமான நிலையத்திற்குள்ளேயே குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

அவர் 29 வயதுடைய தான்சானிய நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.30 மணியளவில் டுபாயிலிருந்து ஃபிட்ஸ் எயார் (FitsAir) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்து மீண்டும் மலேசியாவின் கோலாலம்பூருக்குச் செல்வதற்காக விமான நிலையத்தின் இடைமாறு பயணிகள் முனையத்தில் (Transit terminal) காத்திருந்துள்ளார்.

இதன்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலைய வைத்திய சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு வைத்தியர்கள் மற்றும் செவிலியர்களின் உதவியுடன் அவர் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அதன் பின்னர், தாயும் சேயும் மேலதிக சிகிச்சைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய நோயாளர் காவு வண்டி மூலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here