பயன்படுத்தப்படாத அரச தோட்ட நிலங்களையும் சொத்துக்களையும் முதலீட்டாளர்களுக்கு வழங்கும் தனது திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அரசாங்கம் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது.
இந்த நடவடிக்கை, செயலற்றுக்கிடக்கும் பொதுச் சொத்துக்களை உற்பத்தி சார்ந்த பொருளாதார வாய்ப்புகளாக மாற்றுதல், பிராந்தியப் பொருளாதாரங்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் தோட்டங்களை நவீனமயமாக்குதல் போன்ற நோக்கங்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தோட்டப் பண்ணைகள், தேயிலைத் தொழிற்சாலைகள், கட்டிடங்கள் (பங்களா),விவசாய-சுற்றுலா மண்டலங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தளங்கள் ஆகிய பகுதிகள் உள்ளிட்டவை முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளன.
இந்த முதலீட்டு வாய்ப்புகள் கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை மற்றும் காலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் காணப்படுகின்றன.
இந்த முயற்சி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்கும் திறந்திருக்கும் அதேவேளையில், இலங்கைத் தனிநபர்கள் மற்றும் சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட நிறுவனங்களும் இந்த நீண்டகால அபிவிருத்தி முயற்சியில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் எனது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள் குறித்த மேலதிக விபரங்கள், தோட்டத்துறை அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள கொள்முதல் பிரிவின் மூலம் கிடைக்கின்றன எனப் பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் 2025 வரவு செலவுத்திட்டத்தின் கீழ் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








