வருடாந்தோறும் மேற்கொள்ளப்படும் பேருந்து கட்டண திருத்தம், நடைமுறை கொள்கையின்படி நாளை முதல் அதாவது ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வர வேண்டும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டண மாற்றங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளது, எனினும், பேருந்து சங்கங்களுடன் அதிகாரிகள் கலந்துரையாட தவறியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்பார்க்கப்படும் கட்டண அதிகரிப்பு அமுல்படுத்தப் படாவிட்டால், சங்கத்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை இந்த கோரிக்கைக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பதில் வழங்கியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆணைக்குழுவின் பேச்சாளர், வருடாந்த கட்டண திருத்தத்திற்கான முன்மொழிவு அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் கட்டண திருத்தம் உடனடியாக அமுல்படுத்தப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கட்டண அதிகரிப்பு அமைச்சரவை முடிவுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.








