
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய வைத்தியசாலைகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்களால் நூற்றுக்கணக்கான கட்டிடங்ககள் தரைமட்டமாக்கின. இதில் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு மற்றும் 5,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர், குறைந்தது மூன்று சுகாதார மத்திய நிலையங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகாதார மத்திய நிலையங்கள் பகுதியளவில் மாத்திரமே இயங்கி வருகின்றன.
21 சுகாதார மையங்களில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, மீதமுள்ள வைத்தியசாலைகள் செயற்படுகின்ற போதும், அவை கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளுக்குச் சேவை வழங்குவதில் கடுமையான சீர்குலைவு ஏற்பட்டுள்ளதோடு வைத்தியசாலைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன, அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என முதற்கட்ட ஆய்வுகளுக்கமைய தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் பரவும் அதிக அபாயத்தில் உள்ளனர் எனவும் குறிப்பாக, ஒப்பீட்டளவில் குறைந்த தடுப்பூசி விகிதம் இந்த அபாயத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.







