இந்தியாவின் மணிப்பூரில் 5 மாவட்டங்களில் 20ஆம் திகதி வரை இணையச் சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்ததுடன், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாகத் திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே பதிவாகி வருகின்றன.
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7ஆம் திகதி நடந்த வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன் நேற்றையதினம் (15.09) வரை இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இந்நிலையில், மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழலைக் கருத்தில் கொண்டு, அங்கு இணையச் சேவைக்கான தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 மாவட்டங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை இணையச் சேவைக்கான தடை நீடிக்கும் என அம்மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.








