தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று(23.09.2024) இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மற்றும் இந்திய இருதரப்பு முன்னெடுப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில், ஹரினி அமரசூரியவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்குப் பதிலளித்த அவர், இன்னும் அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் பிரதமர் தமது பதவியிலிருந்து விலகியுள்ளார். எனவே, இடைக்காலத்தில் பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை முதலில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன்பின்னரே எமது அமைச்சரவையை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.








