முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரன் விக்ரமரத்ன, இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) மாற்றத்திற்கான குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ரொஷான் மகாநாம, குமார் சங்கக்கார, துஷீர ரதல்ல, சிதாத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாஃப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் தினால் பிலிப்ஸ் ஆகியோர் வகிக்கின்றனர்.
இலங்கை கிரிக்கட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று விளையாட்டு அமைச்சரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விளையாட்டு அமைச்சு ஓர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டு, முன்னர் பணியாற்றியோரது பதவி விலகல் கடிதங்களை ஏற்று கொண்டதாகவும் அரசாங்கமே தற்பொழுது இலங்கை கிரிக்கட் சபையை நடத்தி வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.
1973-ஆம் ஆண்டின் 25-ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34-ஆம் பிரிவுகளின்படி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் நிலவும் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், நிர்வாக அமைப்பிற்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும் விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.








