உலகத் தலைவர்கள், இராஜதந்திரிகள் கேலி செய்யும் வகையிலேயே தமிழ் தேசியக் கட்சிகள் உள்ளன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி உழவனூர் பிரதேசத்தில் நேற்று (10.11.2024) மாலை மாபெரும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
மாவட்டத்தில் ஏராளமான இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி நடுவீதிகளில் நிற்கின்றனர் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான தீர்வு தீபாவளி தைப்பொங்கல் புது வருட பிறப்பு என்று தீர்வு கிடைக்கும் என்று கூறிக்கொண்டே காலத்தை கடத்துகின்றார்கள்.
தமிழ் தலைவர்களின் இவ்வாறான செயல்பாடுகள் குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் உலகத் தலைவர்கள் கேலி செய்யும் அளவிற்கு தமிழ் தேசிய தலைமைகள் உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.








