மீகொடை, கொடகம சந்திக்கு அருகில் 1,130 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுக்கை குருகல பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் உப பொலிஸ் பரிசோதகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மீகொடை, கொடகம சந்திக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 1,130 மில்லி கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கொக்கெய்ன் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டதாகவும், அதனை கொள்வனவு செய்வதற்காக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொடகம சந்திக்கு வரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கெய்ன் போதைப்பொருளை கொள்வனவு செய்ய சென்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







