ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். அவர் தலைமைத்துவத்திலிருக்கும் வரை அக்கட்சிக்கு எழுச்சியில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை (13/03/2025) ஊடகங்களுக்கு கருத்துவெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியுடன் கட்சி என்ற ரீதியில் நாம் கூட்டணி எதுவும் அமைக்கவில்லை. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. எவ்வாறிருப்பினும் கீழ் மட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிலரது செயற்பாடுகள் தொடர்பில் முன்னரே அறிந்து கொண்டதாலேயே நாம் அங்கிருந்து பிரிந்து சென்றோம். தலைமைத்துவத்தின் பண்பை அறிந்து கொண்டதால் தான் மிகவும் கவலையுடன் அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்க முடிந்தது.
இந்நிலையிலேயே தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான லக்ஷ்மன் விஜேபால புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார். இது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி அரசியலில் முக்கியத்துவமற்ற கட்சியாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி இன்னும் பூச்சி நிலைக்கு வீழ்ச்சியடையும். ஜீவன் தொண்டமானைத் தவிர நாட்டில் வேறு எந்த பகுதியிலும் யானை சின்னத்தில் போட்டியிடவில்லை. ஜனாதிபதித் தேர்தலிலும் யானை சின்னத்தில் போட்டியிட முடியாமல் போனது. ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருக்கும் வரை ஐக்கிய தேசிய கட்சிக்கு எழுச்சியில்லை என்றார்.








