நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை மற்றும் தொடர்பாடல் (Foreign Relations and protocol) காரியாலத்தில் கடந்த பத்து வருடங்களில் இடம்பெற்றதாக் கூறப்படும் கடுமையான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் அதன் நிதி இயக்குநர் ஜீ. சரத் குமார மூலம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் அறுவுறுத்தல்களின்படி, இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த காரியாலயத்தின் அனைத்து கணக்கு மற்றும் செலவுகள் சிறிது காலமாக உரிய தணிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என சபாநாயகருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அதன் அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கத்தின் தணிக்கை தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற அதிகாரிகள் பலர் வெளிநாட்டுப் பயணங்களின் போது டொலர்களை முறைகேடாக பயன்படுத்தியதாக கிடைத்த தகவல்கள் குறித்தும் சபாநாயகரின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த துறையில் வாகனங்களைப் பயன்படுத்துவது தொடர்பான குற்றச்சாட்டுகளும் உள்ள நிலையில் இது தொடர்பில் தணிக்கை குழுக்களின் அவதானமும் ஈர்க்கப்பட்டுள்ளது.






