மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்களை நிரந்தரமாக்க கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (5/20/2025) பொலிஸ் நிலைய வீதி சுற்றுவடத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

வீதி அதிகார சபையில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட 141 ஊழியர்கள் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வந்திருந்த போதும் அவர்களை இதுவரை நிரந்தரமாக்கப்படவில்லை எனவே அவர்களை நிரந்தராக்குமாறு கோரி ஜக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் மட்டக்களப்பு தலைவர் சுரேஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து நகரிலுள்ள பொலிஸ் நிலைய வீதிச் சுற்றுவட்டத்துக்கு அருகில் ஒன்று கூடிய வீதி அதிகார சபையில் தற்காலிகமாக கடமையாற்றிவரும் ஊழியர்கள் பகல் 12.00 மணிக்கு ஒன்று திரண்டு அனைத்து தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கு, 14 நாள் மருத்துவ லீவு வழங்கு, ஏனைய ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்கு, ஜனாதிபதியே எங்களை நிரந்தரமாக்கு போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக காந்தி பூங்காவை சென்றடைந்து அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் 1.00 மணிவரை இடம்பெற்ற பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








