இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னாப்பிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தபோ எம்பெக்கி இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்ற கருப்பொருள்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மேலும் பல இன சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளை எம்பெக்கி பாராட்டினார். மோதலுக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தென்னாப்பிரிக்காவின் அனுபவத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இவர் இன்று (27) நடைபெறவிருக்கும் கேபிடல் மகாராஜா குழுமத்தின் 45வது வருடாந்திர மாநாட்டின் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தனது வருகையின் போது, ஜூன் 28 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள “கம்மடா” வெளிநடவடிக்கை திட்டம் மற்றும் “கனவுகளின் வட்டம்” இளைஞர் மன்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளில் எம்பெக்கி பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.








