சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் இராமநாதன் அர்ச்சுனாவை அங்கிருந்து இடமாற்றம் செய்ய உத்தரவிடும் சுகாதார அமைச்சகத்தின் கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரண நேற்று இரவு (07.07) குறித்த கடிதத்தை பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவிடம் வழங்க முற்பட்டபோது, அதனை ஏற்க மறுத்துள்ள வைத்திய அத்தியட்சகர், இது அலுவலக நேரம் அல்ல என தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வைத்தியசாலை பதில் அத்தியட்சகரை கைது செய்யும் வகையில் வைத்தியசாலைக்கு சாவகச்சேரி பொலிஸார் சென்ற நிலையில் தான் மட்டுமே வைத்தியசாலையில் கடமையில் நிற்பதால் தன்னை கைது செய்து அழைத்துச் சென்றால், அந்த சமயத்தில் வைத்தியசாலையில் எதாவது உயிரிழப்பு ஏற்படின் தானே பொறுப்பு என பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு (07.07) பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
இன்றைய தினம் (08.08) சாவகச்சேரி வைத்தியசாலை முன்பாக பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் போராட்டம் நடைபெறவுள்ள நிலையில், இரவோடு இரவாக வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து அகற்றுவதற்கான முயற்சி எடுக்கப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இன்று காலை (08.08) 8.00 மணியிலிருந்து நாளை காலை 8:00 மணி வரை வைத்தியர்கள் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர்கள் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.