பொசன் போயாவை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, பேருந்துடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கர வண்டியில் அனுராதபுரம் சென்றுள்ளனர்.
இதன் போது, தம்புள்ளை பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து, ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த 54 வயதான தாய் மற்றும் 17 வயதான மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மகனும், பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.