Thursday, March 12, 2026

மறுஅறிவிப்பு வரை கடலுக்கு செல்ல வேண்டாம்

Must Read

கடும் காற்று, கடல் கொந்தளிப்பு, புயல் தொடர்பில், வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை நேற்று இரவு 11.30 மணியளவில் 10.3°N அகலாங்கு மற்றும் 85.3°E நெட்டாங்குகளுக்கு அருகில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கே சுமார் 490 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாகவும், அது எதிர்வரும் 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (03) அளவில் புயலாக உருவாகலாம் என, வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்த தொகுதி இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகிலிருந்துமேற்கு திசை சார்ந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 05ஆம் திகதியளவில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் கூட்டம் நிறைந்தாக இருக்கும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 100 மி.மீ. இற்கு அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

தென் மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் மீனவ மற்றும் கடற்தொழிலில் ஈடுபடுவோர் மறு அறிவித்தல் வரை கடலுக்கு பயணிக்க வேண்டாம்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் அறிவிப்புகள் பற்றி மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights