பொகவந்தலாவ மற்றும் பேலியகொடை பொலிஸ் பிரிவுகளில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30) காலை பொகவந்தலாவ பொகவான தோட்ட பகுதியில் உள்ள கெசல்கமு ஓயாவில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
05 அடி 02 அங்குலம் உயரம் கொண்ட 35 தொடக்கம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் இறுதியாக கருப்பு நிற நீண்ட கால்சட்டை மற்றும் கை குட்டையான வெள்ளை சட்டையை அணிந்திருந்ததாகவும், இடது காதில் அம்பு வடிவ காதணியை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சடலம் தொடர்பான திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு டிக்-ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கண்டி வீதியில் பேலியகொடை நடைபாதையில் மற்றொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு சடலம், கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் சுமார் 55 முதல் 60 வயது மதிக்க தக்கவர் என்றும் 05 அடி 05 அங்குலம் உயரம் கொண்டவர் என்றும் கூறப்படுகிறது.
பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








