தற்போது கைரேகை ஸ்கேனர் இல்லாத அனைத்து அரச நிறுவனங்களிலும் அவற்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
பல அரச அலுவலகங்களில் ஏற்கனவே கைரேகை ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், இதுவரை சிலர் அந்த முறையை பின்பற்றவில்லை என அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்துள்ளார்.
அனைத்து நிறுவனங்களிலும் கைரேகை ஸ்கேனர்கள் அறிமுகப்படுத்தப்படும் என்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும், அது ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் ஒரு வசதியான செயல்முறை எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சமீபத்தில் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவை துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வது முக்கியமானது எனவும், அரச ஊழியர்களுக்கு அரசு நிதியில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் முறையாகக் கணக்கிடப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அபயரத்ன வலியுறுத்தியுள்ளார்.






