நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவின் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி, பாலசுப்ரமணியன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத்தொகுதி துணைச்செயலாளராக பாலசுப்ரமணியன் செயற்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று செவ்வாயக்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகிலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம்தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.








