கொட்டாவ – மாலபல்ல விகாரை வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

உந்துருளியில் பிரவேசித்த இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹோமாகம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த மாதத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.

கடந்த 3 ஆம் திகதி மீட்டியாகொட பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் காயமடைந்தார்.

பின்னர் மே 4 ஆம் திகதி களுத்துறை – நாகொட பகுதியில் தேர்தல் வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

கடந்த ஐந்தாம் திகதி கல்கிஸ்ஸை பகுதியில் 19 வயதான இளைஞர் ஒருவர் உந்துருளியில் பிரவேசித்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 43 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும், அவற்றில் 27க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here