நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் மாத்தளை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இலேசான மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
பலத்த காற்று வீசுகின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.
ஆகையினால் கடலுக்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.








